அம்ருதபுரி எனப்படும் ஸ்ரீராமானுஜ யோகவனத்தில் திருவோண தீபத் திருவிழாவையொட்டி வேதாந்த தேசிகரின் 750ஆவது அவதாரத் திருநாள், தீப விழா, திருப்பாவாடை பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மதுராந்தகம் அருகே படாளம் - வேடந்தாங்கல் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அம்ருதபுரி எனப்படும் ஸ்ரீராமானுஜ யோகவனத்தில் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தையொட்டி, திருவோண தீப விழா நடைபெற்றது. யோகவன வளாகத்தில் வேள்வி பூஜை, வேதாந்த தேசிகரின் 750ஆவது அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சீனிவாசப் பெருமாள் சந்நிதி அருகே வெள்ளை சாதத்தில் காய்கறிகள், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றின் மீது நெய் அகல் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பீடாதிபதி சீதாராம சுவாமி மகா தீபாராதனை காட்டினார். தாரா மாதாஜி முன்னிலை வகித்தார்.