ஏழுமலையான், அனந்தாழ்வாருக்கு பயந்து பின்னோக்கிச் செல்லும் உற்சவம் திருமலையில் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருமலையில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டபோது அவருக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்யும் பணியை வைணவ குரு ராமானுஜர், அனந்தாழ்வாரிடம் ஒப்படைத்தார். அனந்தாழ்வார் தன் மனைவியுடன் திருமலைக்கு வந்து ஏழுமலையானுக்கு மலர்கள் அளிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் அவரின் பக்தியை சோதிக்க விரும்பிய ஏழுமலையான் சிறுவன் வேடத்தில் வந்து தோட்டத்தில் உள்ள பூக்களை திருட்டுத்தனமாக பறித்துக் கொண்டு செல்வார்.
அவரை பூக்களைப் பறிக்க விடாமல் அனந்தாழ்வார் துரத்துவார். அவருக்கு பயந்து சிறுவன் வேடத்தில் இருக்கும் ஏழுமலையான் பின்னோக்கி வந்து ஏழுமலையான் கோயிலுக்குள் சென்று ஒளிந்து கொள்வார். அவர் பின்னோக்கி சென்றதை நினைவுகூரும் வகையில் பாக் சவாரி என்ற உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் தேவஸ்தானம் இந்த உற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன்படி சனிக்கிழமை மாலை ஏழுமலையான் தன் நாச்சியார்களுடன் திருமலையில் உள்ள அனந்தாழ்வார் தோட்டத்திற்கு சென்று, மலர்களைப் பறித்து அனந்தாழ்வாரால் துரத்தப்பட்டு, பின்னோக்கி பாய்ந்து வந்து கோயிலுக்குள் மறைந்து கொள்வதை அர்ச்சகர்கள் சிறப்பாக நடத்தினர். இந்த உற்சவத்தில் பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.