மகாளய பட்சம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த வருடம் பிரதமையில் ஆரம்பித்து 08.10.18 திங்கட்கிழமை வரை இந்த மகாளய பட்சம் வருகிறது.
இந்துக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளிலோ தங்கள் பிதுர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களின் ஆசியினால் நம் குடும்பத்தில் நமக்குத்தெரியாமல் நடந்துவரும் வினைகள் பனிபோல் விலகும் என்பது சத்தியம்.
தர்ப்பணம் செய்யும் போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 9 முக்கியத் தகவல்கள்...
1. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதக்கும்படி கொட்டக்கூடாது.
2. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது தாம்பாளத்தில் கூர்ச்சம்(முடிஞ்சு வைத்த தர்ப்பை) வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறு இடத்துக்கு நகர்த்தக்கூடாது.
3. குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது.
4. தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணை தேய்த்துக் கொள்வதோ கூடாது.
5. சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம்.
6. அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.
7. பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்யாக இருந்தாலும், கரையில்லாத வேஷ்டியைக் கட்டிக்கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது.
8. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.
9. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதுபோல் கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.
தர்ப்பணம் கொடுப்பவர்கள் இந்த ஒன்பது தகவல்களையும் பின்பற்றுவது அவசியம்.