மிகப் பழமையான திருக்கோயில்களின் திருப்பணிகளை துரிதப்படுத்த தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு (26-9-2018) இன்று காலை10 மணி அளவில் நடைபெற்றது.
தமிழகத்தில் பழங்காலத்தில் மன்னர்களால் எழுப்பப்பட்டுள்ள ஏராளமான திருக்கோயில்கள் பராமரிப்பின்மை காரணமாக சிதிலமடைந்து உள்ளன. இக்கோயில்களைத் திருப்பணி செய்து புனரமைத்து திருக்குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் தமிழக அரசை வலியுறுத்த வேண்டி, மேதகு தமிழக ஆளுநருக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை தாங்கினார். மேலும் பழமையான கோவில்களுக்குத் திருப்பணி செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் தொய்வுகள் பற்றி உரையாற்றினார். தொடர்ந்து திருக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ள அன்பர்களும் தங்களுக்கு நேரும் பிரச்னைகளை பற்றி கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 1-கீழக்கொற்கை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், 2-பட்டிஸ்வரம் பிரம்மநந்தீஸ்வரர் ஆலயம் 3-சிவபுராணி மாணிக்கேஸ்வரர் ஆலயம் 4-கோட்டூர் காசிவிஸ்வநாதர் 5-அம்மாபேட்டை அருணாச்சலேஸ்வரர் 6-இரண்டாம் கட்டளை கயிலாசநாதர் ஆலயம் 7-பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் ஆலயம் மற்றும் இவ்வாலயங்கள் போல் இருக்கும் அனைத்துக் கோயில்களுக்கும் தனித்தனியாகவும் தொகுப்பாகவும் ஆளுநர் அவர்களுக்கு பதிவுத் தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது. இப்போராட்டத்தில் ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
- குடந்தை - ப.சரவணன் 9443171383