திருமலையில் செவ்வாய்க்கிழமை இரவு பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி இரவில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் நடைபெறும் கருட சேவையை திருமலைக்கு வந்து காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசிப்பர். அதன்படி செவ்வாய்க்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற்றது.
கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவமூர்த்திக்கு ஆரத்தி அளித்து வணங்கினர். இதில், அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.