கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாசிமகம் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்று வந்தது. விருத்தகீரிஸ்வரர் விருத்தாம்பிகையுடன் சந்நிதியிலிருந்து வெளியே வந்த விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 பஞ்ச மூர்த்திகளும், தனித் தனியாக 5 திருத் தேர்களில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேர்களை, ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதிகளின் வழியாகச் சென்ற தேர்கள் நிலையை அடைந்தன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று தீர்த்தவாரி: மாசிமகம் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் தீபாசத்தியன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.