மாசி மக உற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ஆதிதேகவப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயிலில் மாசி மக உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் கடந்த 4 நாள்களாக காலை, மாலை நேரங்களில் வீதி உலா வந்தார். உற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை காலையில் பெருமாள் கருட வாகனத்திலும், ராமாநுஜர் பல்லக்கிலும் வீதி உலா வந்தனர்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் ஆதிகேசவப் பெருமாளுக்கும், ராமாநுஜருக்கும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து மதியம் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதிகேசவப் பெருமாளையும், ராமாநுஜரையும் தரிசித்தனர்.