மாசி மகத்தையொட்டி, மாமல்லபுரத்தில் இருளர் சமூகத்தினரின் திருவிழா மாமல்லபுரம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் சமூகத்தினர் கூடி திருவிழா கொண்டாவது வழக்கம். இதையொட்டி அவர்கள் கடற்கரையில் கடந்த சில நாள்களாக குடில்களை அமைத்து தங்கியிருந்தனர். திங்கள்கிழமை இரவு முழுவதும் ஆடல், பாடல்களுடன் மகிழ்ச்சியாக திருவிழா கொண்டாடிய இருளர் சமூகத்தினர் செவ்வாய்க்கிழமை காலையில் கடல் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தினர்.
மாசித் திருவிழாவைக் காண்பதற்காக மாமல்லபுரத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் இவ்விழாவைக் கண்டுகளித்தனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் படம் எடுத்தனர். இருளர் சமூகத் திருவிழாவால் மாமல்லபுரம் கடற்கரை பரபரப்பாகக் காணப்பட்டது.