மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் மாசிமாத பௌர்ணமியை முன்னிட்டு சத்ய நாராயண பூஜை, பௌர்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழியில் ராகவேந்திரர் பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பிருந்தாவனம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6 மணிக்கு, மங்கல இசையுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
ராகவேந்திரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு தவயோக பீடத்தில் இருந்து பீடாதிபதி ரகோத்தம சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவர் அனைத்து சந்நிதிகளிலும் பூஜை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சத்யநாராயணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் உள்ளிட்ட சுவாமி விக்ரகங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில், பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.