திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் புதிய உறுப்பினராக ராமச்சந்திரா ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்களை நியமித்து ஆந்திர அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது. அதில் கடப்பா மாவட்டம், ராயசோட்டியைச் சேர்ந்த பிரசாதபாபு அதை ஏற்க மறுத்து, ஆந்திர முதல்வருக்கு தகவல் அனுப்பினார். இந்நிலையில், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா ரெட்டி வியாழக்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் தேவஸ்தான செயல் அதிகாரி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்.