ஏழுமலையான் உண்டியல் வருமானம் திங்கள்கிழமை ரூ.2.25 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.25 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.14 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.14 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
78,181 பேர் தரிசனம்
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 78,181 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,833 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 13 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 12 மணி நேரம் வரை ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
சோதனைச் சாவடியில் ரூ.1.82 லட்சம் வசூல்
அலிபிரி சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 76,098 பயணிகள் கடந்துள்ளனர். 9030 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ன. அதன் மூலம் ரூ.1.82 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.12,647 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.