கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள்
செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கின.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 22.5 கோடி மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மூலவராக வெங்கடாஜலபதியும், பத்மாவதி தாயார், ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்தளத்தில் கல்யாண மண்டபம், அன்னதானக் கூடம், முடிகாணிக்கை செலுத்துமிடம், பிரசாத ஸ்டால் ஆகியனவும், கோயிலைச் சுற்றி தேரோடும் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பிலிருந்து ஒற்றையால்விளை வழியாக சின்னமுட்டம் துறைமுக சாலையிலிருந்து கோயிலுக்குச் செல்ல தனியாக பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜை: இக்கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, 5 நாள்கள் நடைபெறும் யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் யாகசாலை பூஜையை நடத்துகின்றனர். இதில், திருமலை தேவஸ்தான முக்கிய அதிகாரிகள், உள்ளூர் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.