சுதர்ஸன ஜெயந்தி: அபய கரம் நீட்டும் சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிக்கேணி,
சுதர்ஸன ஜெயந்தி: அபய கரம் நீட்டும் சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் இன்று (10/7/2019) புதன் கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும். மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாகக் குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாசனாகவும் திகழ்பவர் கருடன். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும்.

சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள். பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார். அவரின் எண்ணத்தைத் திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான். 

தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார். 

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. வீரத்தினை குறிக்கும் செவ்வாயின் அதிதேவதை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள சுதர்சன அம்ஸத்தை காணும்போது முருகனுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். 

ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்.  

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றைக் குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும்.

கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றை குறிக்குமிடம் ஆகும். மேலும் கன்னி ராசி கால புருஷ பத்தாமிடமான கர்ம ஸ்தானத்திற்கு ஒன்பதாமிடமாக வருவதால் ஒருவரின் கர்மாவை தெரிவிக்கும் இடமாகவும் கன்னி ராசி அமைந்துள்ளது. 

புதனின் மற்றொரு வீடான மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மேலும், மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே, மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்னைகளை குறிக்குமிடமாகும்.

செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார். ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது.  பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர். பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷங்கள் எனப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.

சுதர்ஸன பகவானின் பெருமையை நாடறியச் செய்ததில் முதலானவர் என்ற பெருமை ஸ்வாமி தேசிகனையே சாரும். இவர் இயற்றியுள்ள சுதர்ஸனாஷ்டகம் போன்ற ஸ்லோகங்கள் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது. அதைப் போன்றே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது. இவற்றைப் பாராயணம் செய்தும், சுதர்சனர் சன்னதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். சுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. சுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை சுதர்ஸன நரசிம்மம் என்பர்.

சிவன் கோயில்களில் சிவாம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார் நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவக்கிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.  

செவ்வாயின் சித்திரை நக்ஷத்திம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்திரியத்தைப் போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம். முக்கியமாக இன்றைய கோச்சாரத்தில் சந்திரனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருள் நிறையும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com