கடக (ஆடி) மாதத்தில் சிவன் சக்தியில் அடக்கம் - பகுதி 1

சூரியனானவர் தன் ரதத்தில் வடதிசையிலிருந்து தென் திசைநோக்கி பயணம் செய்யும் முதல்
கடக (ஆடி) மாதத்தில் சிவன் சக்தியில் அடக்கம் - பகுதி 1

சூரியனானவர் தன் ரதத்தில் வடதிசையிலிருந்து தென் திசைநோக்கி பயணம் செய்யும் முதல் மாதப் பிறப்பு ஆடி மாதம். ஆடி முதல் மார்கழி வரையான ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்ணிய காலம். ஆடி மாதம் முழுவதும் சைவ வைணவ கடவுள்களுக்கு உகந்த மாதம் என்றே கூறவேண்டும்.

இந்த சமயத்தில் பிராண மற்றும் ஜீவாதார சக்திகள் மிகுந்து காணப்படும். இந்த மாதத்தில் பகல் குறைவாகவும் இரவு அதிகமாகவும் இருக்கும். இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆடி மாதம் ஒன்றில் தான் தட்சனின் மகளாக பார்வதி தேவியும், ஆண்டாள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தாக கூறப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார் என்பது ஐதீகம்.

மகாலட்சுமி, மாரியம்மன், மீனாட்சி, காஞ்சி காமாட்சி, ஆண்டாள், குலதெய்வம், கருமாரி, அனைத்து அம்மன்களும் மற்றும் ஆறுமுக கடவுள், ஹயக்ரீவ மூர்த்தி, குருமார்கள் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்குரிய சரியான மாதம் ஆகும். 

ஜோதிடத்தில் ஆடி மாதம் 

சூரியன் வைத்து தான் ஜோதிடம். கிரகங்களின் தலைவர் சூரிய ஆவர். ஆதவன் மிதுனத்திலிருந்து கடகத்தில் சந்திரன் வீட்டில் பிரவேசிக்கும் காலம் ஆடி மாதம் ஆகும். வேத ஜோதிடப்படி சிவன் என்பவர் சூரியனாகவும், அன்னை பார்வதி என்பவர் சந்திரனாகவும் கூறப்படுகிறது. அம்பிகை ஆட்சி புரிகின்ற வீடான கடகத்தில் அம்மையப்பன் ஈசன் ஒரு வருடம் கழித்து அங்கு அமரும் காலம் (ஒன்று சேருவதால்). அம்பாளுக்குப் பிடித்த ஆடி மாதம் என்று கூறலாம். இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருப்பதாக ஒரு ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாகத் திகழ்கிறது. இந்த ‘கற்கடக’ (ஆடி) மாதத்தில் வரும் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் பெருமை பெற்றது மற்றும் அவற்றின் பலம் பலமடங்கு இரட்டிப்பாகும். முக்கியமாக ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி அன்று அரசமரத்தைப் பெண்கள் வலம் வருவது குழந்தைப்பேற்றினை அளிக்கும். ஆடி மாதத்தில் திருமணம் ஆன பெண்கள் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் அதற்கு பல்வேறு காரணம் கூறினாலும், அதைவிட முக்கிய காரணம் பெண்களுக்குரிய மாதமான ஆடியில் சுமங்கலிகள் பூஜை விரதங்கள், ஜபங்கள், வழிபாட்டுமுறைகளைக் கற்றுக்கொடுக்கும் கடமை தாயாருக்கும் மற்ற பெரியாருக்கும் உள்ள முக்கிய கடமை ஆகும். 

நம் பாரத இந்தியா விடுதலை ஆனா மாதம் ஆடி மாதமாகும். 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து, தனித்துவமிக்க நாடக நம் பாரத நாடு திகழ்ந்தது. விடுதலையானா கடக மாதம் முழுவதும் நாம் பாரத தாயினை வாழ்த்தி நன்றி சொல்லி வணங்குவோம்.

முக்கியமாக இந்த ஆடி மாதங்களில் சூரியன் சந்திரன் (அமாவாசை) இணைவு மற்றும் நேர் பார்வை (பௌர்ணமி), சந்திரானவர் சுக்கிரன் மற்றும் சூரியன்  நட்சத்திர காலில் அமரும்பொழுது;  செவ்வாய், வெள்ளி (சுக்கிர) கிழமைகள் மற்றும் ஒருசில திதிகள் எவ்வாறெல்லாம் பலம் பெறுகிறது என்று பார்ப்போம்.

தேவர்கள் மாதம்

தட்சிணாயன காலமான ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாத காலமும் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும்;  அடுத்து வரும் உத்தராயணம் காலமான தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு  பகல் காலம் ஆகும்.  தட்சிணாயன காலங்களில் சூரியனின் பிரகாச ஒளி பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும். அந்த ஆறுமாதமும் கோவில்களில் தேவர்களை ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

ஆடிப்பட்டம் தேடி விதை 

இந்த தெய்வீக மாதம் வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் உற்சாகமாக உழைக்கும் காலம். ஆடியில் தென்மேற்கு பருவத்தில் பெய்த மழையினால் உழவர்கள் இந்த பருவகாலம் விதை விதைக்க உகந்த மாதமாகும். ஆடிப்பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவற்றை ஆடிப்பெருக்கு எனச் சொல்லுவார்கள். ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் காண்பார்கள். அறுவடையில் வந்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவார்கள். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் முக்கியமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக  பத்து நாட்களில் நடைபெறும்.

ஆடிப்பெருக்கு அன்று மக்கள் கூட்டம்கூட்டமாக ஆற்றங்கரைகளில் ஒற்றுமையுடன் காவேரி சுற்றி உள்ள புண்ணிய ஆற்றில் குளித்து காவேரி தாயை வணங்கி அங்குள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். அன்று பலவிதமான கலந்த சாதங்கள் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று அவரவர் ஊருக்கருகில் உள்ள ஆற்றங்கரையில் வைத்து அக்கம் பக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவு உண்டு மனஅழுத்தமில்லா சந்தோஷமாக இருப்பார்கள். இந்தவித மகிழ்ச்சி இக்காலங்களில் குறைந்துள்ளது. பல காலங்களுக்கு முன்பாக இதிகாசம், புராணங்களில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் பழுதாக மாறும்பொழுது அவற்றை புது ஓலைச்சுவடிகளில் எழுதிப் புதுப்பித்து பழையனவற்றை ‘பதினெட்டாம் பேர்' அன்று புண்ணிய தீர்த்தங்களிலோ கொண்டுபோய் போட்டுவிடுவார்கள். இதில் புதுப்பிக்காமலே பழைய புராண ஓலைச் சுவடிகள் அழிந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையன்று கடல், குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் குளித்து விட்டு, அவரவர் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போட்டு நம் முன்னோர்களை வணங்கி வழிபட்டால் எல்லாவித சனி மற்றும் பித்ரு தோஷங்களும் நீங்கி, குடும்பம் எல்லா செல்வமும் கிட்ட வாய்ப்பு உள்ளது.

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது. அன்றைய தினம் பித்ருக்கள் நம்மைத் தேடி வருவதாக ஐதீகம். அதனால் நாம் சுத்தமாக சமைத்து, அந்த உணவை முன்னோர்களுக்கு படைத்தது அவர்களை நினைத்து குடும்பம் தழைக்க வேண்டிக்கொள்ள வேண்டும். ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம், ஏழை எளியோருக்கு மருத்துவச் செலவுக்கு உதவ உகந்த நாள் ஆகும்.

குருவே சரணம்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி

whats App: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com