2019-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று தோன்றுகிறது. இன்று நள்ளிரவு 1.32-க்கு பிடிக்கப்பட்டு, பின்னிரவு 3.00 மணிக்கு மத்திம நிலைக்கு வந்து 4.30 மணிக்கு கடந்துவிடுகிறது.
சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் தோன்றுகிறது. இதில் பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் என்பது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமி சூரியனின் கதிர்களை சந்திரன் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுகிறது. அதாவது சூரியனால் பூமிக்கு நிழல் தோன்றி, அந்த நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால், சந்திரன் தெளிவாகத் தெரியாமல் போகும். இந்த நிகழ்வையே சந்திர கிரகணம் என்கிறோம்.
பொதுவாக சந்திர கிரகணத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களும் மூடப்படுவது வழக்கம். ஆனால், திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் மற்றும் காளஹஸ்தி ஆகிய கோயில்களில் உள்ள நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
திருப்பதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில். இங்கு ராகு, கேது தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் நாகப் பிரதிஷ்டை பூஜை செய்வது வழக்கம். இதைத் செய்வதால், நீண்ட காலமாகத் தடைப்பட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.
சந்திர கிரகண காலங்களில் மற்ற கோயில்கள் 5 மணி நேரத்திற்கு முன் நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்தவுடன் நடை திறந்து, சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்ட காரியங்கள் நடைபெற்ற பின் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது வழக்கம். ஆனால், திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி மற்றும் ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் மட்டும் சூரிய, சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
கோயிலில் முன்கூட்டியே பதிவு செய்த பக்தர்கள் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் சந்திர கிரகண பூஜையில் பங்கேற்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்துகொள்வது முக்கியம்.