திருமலையில் வார இறுதி நாள்களில் விஐபி-க்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரும் பக்தர்களுக்கான தரிசனத்தை ரத்து செய்வதை தேவஸ்தானம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவர் என்பதைக் கருதி தேவஸ்தானம் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை விஐபி-க்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசனத்தை ரத்து செய்தது. இந்நிலையில், வார இறுதி நாள்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால், பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் தரிசனத்தை தேவஸ்தானம் ஆகஸ்ட் 18 வரை ரத்து செய்து விட்டது.
எனினும், கோயிலுக்கு நேரடியாக வரும் விஐபிக்களுக்கு சிறப்பு தரிசனம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.