திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருமண மண்டபங்களை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் நடைமுறையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
ஆந்திரம், தெலங்கானா ஆகியவை தவிர பல்வேறு மாநிலங்களிலும் திருமண மண்டபங்களைக் கட்டி அவற்றை பக்தர்களுக்கு வாடகைக்கு அளித்து வருகிறது. இந்த மண்டபங்களை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபங்களுக்கு சென்று முன்பதிவு செய்து வந்தனர். இந்த நடைமுறையை தற்போது தேவஸ்தானம் எளிதாக்கியுள்ளது.
அதன்படி, திருமண மண்டபங்கள் தேவைப்படும் பக்தர்கள் ttdsevaonline.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆந்திரத்தில்வில் 210 மண்டபங்கள், தெலங்கானாவில் 74, கர்நாடகத்தில் 5, தமிழ்நாட்டில் 3, கேரளத்தில் 1, ஒடிஸாவில் 1 என திருமண மண்டபங்களை பக்தர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்யும் விதம்: ttdsevaonline.com என்ற இணையதளத்தில் சென்று தங்களின் விவரங்களை பக்தர்கள் கட்டாயப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் திருமண மண்டபம் தேவைப்படும் மாநிலம், மாவட்டம் உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண மண்டபம் காலியாக உள்ள தேதியைத் தேர்ந்தெடுத்து புகைப்படம், ஆதார் எண் உள்ளிட்டவற்றைப் பதிவேற்ற வேண்டும்.
அதன் பின் திருமண கல்யாண மண்டபத்துக்கான வாடகையை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். அதன் பின் முன்பதிவு செய்த பக்தர்களுக்கும், திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் அதிகாரிக்கும் குறுந்தகவல் அனுப்பப்படும். அதை திருமண மண்டப அதிகாரியிடம் காட்டி பக்தர்கள் மண்டபத்தை வாடகைக்கு எடுக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
திருமணம், உபநயனம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு, சஷ்டியப்த பூர்த்தி, அன்னபிராசனம், சத்யநாராயண விரதம், வரவேற்பு உள்ளிட்டவற்றை இந்த மண்டபங்களில் நடத்திக் கொள்ளலாம்.