‘ஞானம் தந்து என்னை ஆதரித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கந்தனூருக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சிர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன தந்ததான
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும் வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி வங்களாலே
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ யென்றுகூற
மைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத்தழுவல் சிந்தியாதோ
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர் மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
அண்டரே றக்கிருபை கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
எந்தைபா கத்துறையு மந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
எந்தைபூ சித்துமகிழ் தம்பிரானே.