‘நான் உன்னைப் பற்றுவதை எண்ணவேண்டும்’ என்ற கருத்து உன் திருச்சித்தத்திலே ஏற்படவேண்டும் என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. ‘விருப்பமுற்றுத் துதித்து எனைப் பற்று’ என்று வருகின்ற இரண்டாம் அடியை, குருநாதரின் வாழ்க்கைக் குறிப்பு என்று கொள்ள இடமுண்டு.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, எட்டு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும் அமைந்துள்ளன.
தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த தனதானா
கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து மறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ளுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி மகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச மரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த மயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த பெருமாளே.