‘உன்னை மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன தனதான
மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ ரனைவோரும்
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு மடியாரும்
புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு முருகாதே
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ தொருநாளே
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு மதிசூடி
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு மருள்வோனே
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய் வடிவேலா
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத பெருமாளே.