‘யமனை விலக்கியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் விராலி மலைக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் நான்கு குறிலுமாய் ஐந்தெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
தனாதனன தான தந்த தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.