அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும் உள்ளன. (குறிப்பு: படிப்பதற்கு வசதியாகப் பிரிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் அமைப்பை, தாளக் கணக்குக்கு ஏற்ப ‘நேருறுபு ழுக்கள்’, ‘பாரியந வத்து’ என்று மாற்றிப் பிரித்தால்தான் இந்த எழுத்துக் கணக்கு சீராக வரும்.)
தானதன தத்த தான தானதன தத்த தான
தானதன தத்த தான தனதான
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
நீள்குளிர் வெதுப்பு வேறு முளநோய்கள்
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
நீடிய விரத்த மூளை தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
பாய்பிணி யியற்று பாவை நரிநாய்பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
பாழுட லெடுத்து வீணி லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்திபூத
நாயக ரிடத்து காமி மகமாயி
நாடக நடத்தி கோல நீலவரு ணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி திரிசூலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர மயிலோனே
மாடமதில் முத்து மேடை கோபுர மணத்த சோலை
வாகுள குறட்டி மேவு பெருமாளே.