பாடல் 10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவுஇல் பெரும் பாழேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீயோ,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.
சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த, முடிவற்ற, பெரிய மூலப்பகுதியாகத் திகழ்கிறவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, உயர்ந்த, நல்ல, மலர்ச்சோதிவடிவானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, சுடர்விடும் ஞான இன்பமானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய என்னுடைய ஆசை தீரும்படி என்னைச் சூழ்ந்தாயே.