பாடல் 2
மாயம் செய்யேல் என்னை, உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசம்செய் பூங்குழலாள் திரு ஆணை, நின் ஆணை கண்டாய்,
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய், என்னைக் கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ.
எம்பெருமானே, என்னிடம் மாயம் செய்யாதே, உன்னுடைய திருமார்பில் மாலைபோல் விளங்குகிற நங்கை, வாசனை நிறைந்த பூங்குழலைக்கொண்ட திருமகள்மீது ஆணை, உன்மீது ஆணை, என்னை நேசித்து, என்னுடைய உயிரை வேறோர் உயிராகக் கருதாமல், வெறுக்காமல் உன்னோடு என்னை ஒன்றாக ஏற்றுக்கொண்டாய், இங்கே வந்து என்னை உன்னோடு கூவி அழைத்துக்கொள், அடடா.