பாடல் 5
போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால், பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை, அந்தோ, எனது என்பது என், யான் என்பது என்,
தீர இரும்பு உண்ட நீர் அதுபோல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.
எம்பெருமானே, நீ என்னைக் கைவிட்டு வேறுபக்கம் செல்லலாமா? அப்படிச் சென்றால் நான் யாரைத் துணையாகக் கொள்வேன்? எதைச் செய்வேன்? உன்னைத்தவிர எனக்கென்று ஏதேனும் உண்டா? நீயில்லையேல் நான் என்பதுதான் உண்டா? அடடா. இரும்பானது தன்னுடைய வெம்மையைத் தணித்துக்கொள்வதற்காக நீரை உண்பதுபோல நீ என்னுடைய அரிய உயிரை முழுமையாகப் பருகினாய், எனக்கு ஆரா அமுதமாக ஆனாய்.