பாடல் 6
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், இனி உண்டொழிவாய்,
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண், செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா, என் அன்பேயோ.
புனத்திலே பூத்த காயாம்பூவைப்போன்ற நிறத்தைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்கள், செங்கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, உனக்கு ஏற்ற அழகைக்கொண்டவள், பூவிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் அன்பனே, எனக்கு அன்பானவனே, என்னுடைய ஆரா அமுதமான நீ எனக்குள் பெரும் விருப்பத்தை உண்டாக்கி என்னுடைய ஆவியை, இனிய உயிரை உண்டாய், இனியும் அவ்வாறே உண்பாய்.