பாடல் 5
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன், நரகத்தை நகு நெஞ்சே,
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ்பாதன், செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே.
பரமபதத்தை அடைவதற்கு வழி தந்த எம்பெருமான், திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் சொன்னபடி நான் பரமபதத்தை அடைகிறேன், தேன் நிறைந்த மலர்களைக்கொண்ட திருத்துளவம் திகழ்கிற திருவடிகளை உடையவன், செழுமையான பறவையாகிய கருடனின்மீது ஏறி ஊர்ந்துசெல்பவனுடைய திருவடிகளை என் தலைமீது சூடிக்கொண்டேன். நெஞ்சமே, இனி நரகத்தை எண்ணி உனக்கென்ன அச்சம்? அதைப் பார்த்துச் சிரிப்பாய்.