பாடல் 7
குரைகழல்கள் குறுகினம், நம் கோவிந்தன் குடிகொண்டான்,
திரைகுழுவு கடல் புடைசூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவும் மணிமாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவும் நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே.
சத்தமிடும் கழல்களை அணிந்த எம்பெருமானின் திருப்பாதங்களை நாம் அடைந்தோம், அந்தக் கோவிந்தன் நம்மைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அருளினான். அலைகள் நிறைந்த கடலாலே பக்கங்களில் சூழப்பட்ட தென்னாட்டுக்கே திலகத்தைப்போல் திகழுகின்ற திருத்தலம், மலைகள் ஒன்றுகூடியதுபோல் உயர்ந்த, அழகிய மாடங்கள் நிறைந்த திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருக்கிறார் எம்பெருமான், அவருடைய மலர்த்திருவடிகளிலே, அவரது திருமேனியிலே நறுமணம் நிறைந்த திருத்துளவம் கமழுகிறது.