வழக்கமான தீபாவளி மலர்களிலிருந்து வழக்கம் போல வேறுபடுகிறது, "அம்மன் தரிசனம்' தீபாவளி மலர்.
எல்லா தீபாவளி மலர்களும் பல்சுவையாக, கதை, கட்டுரைகள், ஆன்மிகம், சிறுகதைகள், சினிமா என்று வெளிக்கொணரும்போது, அம்மன் தரிசனம் வித்தியாசமாக ஆன்மிகத்துக்கு மட்டுமே இடம் அளித்து வெளிக்கொணரப்படுகிறது என்பதுதான் தனி சிறப்பு. இந்த ஆண்டு தீபாவளி மலரும் அந்தக் கொள்கைக்கு விதிவிலக்கல்ல.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கரசாரியாரியின் அனுக்ரஹ சந்தேசத்துடன் தொகுத்துத் தரப்பட்டியிருக்கும், அம்மன் தரிசனத்தின் முதல் கட்டுரையே பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த சுவாமிகளின், "ஆதி சங்கரர்' காட்டும் அறிவொளி என்கிற கட்டுரை. "கம்பவாரிதி ' இலங்கை ஜெயராஜ், "சொல்வேந்தர்' சுகி சிவம் என்று இலக்கிய, ஆன்மிக ஆளுமைகளின் அணிவகுப்பே நடத்தப்படுகிறது.
முழுக்க முழுக்க பக்தி மணம் கமழும் "அம்மன் தரிசனம்' தீபாவளி மலரை ஆன்மிக மலர் என்று குறிப்பிட்டாலும் தவறில்லை. அத்வைத சித்தாந்திகளுக்குப் பெரு விருந்து இந்த மலர்.