காஞ்சி மகா பெரியவரின் "முருகன் என்றால் அழகு', சிருங்கேரி சாரதா பீடாதிபதியின் அருளுரை, சைவ சமய வரலாறு, இலங்கையில் முருக வழிபாடு, சுவரோவியங்களில் தசாவதாரக் காட்சிகள், நல்லூர் கந்தசாமி கோயில், காசி அன்ன பூரணி, கிரிவலம் செய்யும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, ஆசீவகம் காட்டும் சாஸ்தா(ஐயன்) வழிபாடு - என ஆன்மிகம் தொடர்பாக இம்மலரில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டியவை.
இந்தியாவிலேயே சிறந்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய "கோலம்' சாந்தி ஸ்ரீதரனின் பேட்டி ரசிக்கும்படியாக உள்ளது. "மூங்கிலிலை மேலே தூங்கும் பனி நீரே' என்கிற பாடல் உருவான விதத்தை விளக்கும் கி.வ.ஜ.வின் கட்டுரை, இல. கணேசனின் "தமிழ் வியாசர் உ.வே.சா.' , மாத்தளை சோமுவின் "ஆஸ்திரேலியாவின் முதல் மனிதன் இந்தியனே', தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவ ராமன் குறித்த அ.ச.ஞா.வின் அரிய பதிவு ஆகியவை சுவாரசியமான பல தகவல்களைத் தருகின்றன.
வித்யா சுப்ரமணியத்தின் " தாய் பிறந்தாள்' சிறுகதை கண்ணில் நீர்கோக்க வைக்கிறது. ராஜேஸ்குமாரின் "ஒரு சொல்', லட்சுமி ராஜரத்தினத்தின் "வேர்ப்பூக்கள்' ஆகிய சிறுகதைகள் ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.
"கவிஞர் வாழ்வு பெற்ற ஜூபிடர் பிக்சர்ஸ்', விஜய் சேதுபதி பற்றிய சினிமாப் பதிவுகள், இடம்பெற்றுள்ள கவிதைகள் ரசிக்கும்படி உள்ளன.
ஓவியர் சித்திரலேகாவின் கண்ணைக் கவரும் திருவெம்பாவை ஓவியங்களுடன் கூடிய திருவெம்பாவை பாடல் வரிகளில் உள்ள பிழைகளைக் கவனமாகப் பார்த்துத் திருத்தியிருக்கலாம்.