சீரடி சாயி பாபாவின் பெருமைகளைச் சொல்லும் "சாயி மார்க்கம்' தீபாவளி மலர், சாயிபாபா குறித்த அரிய தகவல்களையும், அவரது சமகால பக்தர்களில் ஒருவரான ஸ்ரீ பாலாஜி பிலாஜி குரோவ் சாயிபாபா குறித்த கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் சிறப்பாக வெளியிட்டு சாயி பக்தர்களை நெகிழ வைத்துள்ளனர். சாயிபாபா இருந்தேபோதே நடைபெற்றுவந்த நான்கு வேளை ஆரத்தி வழிபாடுகள் இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள சாயிபாபா ஆலயங்களில் அப்படியே நடந்து வருவதும் சிறப்பான கட்டுரைகளாக நம் கண்முன்னே விரிகின்றன.
விமலா ரமணியின் 'இறை தேடும் பறவைகள்' பக்திச் சிறுகதை சாயி பக்தியைப் பகிர்கிறது. சாயிபாபாவின் அன்னையாக, சீரடியிலேயே தம் வாழ்நாள் முழுவதும் கழித்த ராதாகிருஷ்ண மாயியின் பெருமைகள், பகவான் ரமணர் முதல் சீரடி சாயி வரை தனித்தன்மை வாய்ந்த கடவுளின் அவதாரம் சீரடி சாயிபாபா, ஸ்ரீ சாயி சத்சரிதம் உருவான வரலாறு, பாபா என்னிடம் வந்தாரா? நான் அவரிடம் சென்றேனா? போன்ற கட்டுரைகள் ஆன்மிக அனுபவங்களைப் பகிர்கின்றன.
கோயம்புத்தூர் அடியவருக்கு சீரடியில் சமாதி, ஜெயதேவரின் அமர காவியம் , மைசூரிலுள்ள பேலூர் பற்றி 'எழில் கொஞ்சும் பூலோக வைகுண்டம்', ஆன்மிக கேள்வி பதில்கள் என பல்வேறு ஆன்மிக கட்டுரைகள் அடங்கிய இவ்விதழ், சாயி பக்தர்கள் நெஞ்சில் பக்தி ரசம் பொங்க வைக்கும் முத்தான மலர்!