அஷ்டாவக்ர மகாகீதை - அறிந்தது - அறியாதது - அறிய முடியாதது; பக்.416; ரூ.400; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; 044- 2436 4243.
விதேக மகாராஜா ஜனகருக்கும் அவரைச் சீடனாக ஏற்ற அஷ்டாவக்ர முனிவருக்கும் இடையே நிகழ்ந்த ஆன்மீக உரையாடல்களின் தொகுப்பே அஷ்டாவக்ர மகாகீதை என்றழைக்கப்படுகிறது. அதில் உள்ள 298 சூத்திரங்களில் 31 சூத்திரங்கள் சார்ந்து கேள்வி - பதில்களுடன் ஓஷோ வழங்கிய பத்து சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல்.
"தீ என்ற சொல் எதையும் எரித்துவிடாது. ஆனால் உன் கையில் சிறு தணலை வைத்தால் அந்த இடம் வெந்து கொப்புளமாகிவிடும். நெருப்பு என்னும் சொல் நிஜத்தில் நெருப்பு இல்லை. அதுபோல் கடவுளைப் பற்றிய கொள்கையோ அவரை வர்ணிக்கும் சொற்களோ கடவுளாகிவிடாது... கடவுள் எல்லையற்றவர். கரைகள் அற்றவர். தொடக்கமும் முடிவும் இல்லாதவர். நீ எப்படி அவரை முழுமையாக அறிந்து கொள்ள இயலும்? ஒரு பொழுதும் இயலாது' என கடவுளைப் பற்றிய அஷ்டாவக்ரமுனிவரின் கருத்தை ஓஷோ விளக்குகிறார்.
ஐன்ஸ்டீன் கருத்துப்படி காலம், இடம் இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றையொன்று சார்ந்தவை. "உன் உடல் எங்காவது சென்றாலும் நிஜமான நீ ஒரே இடத்திலேயே இருக்கிறாய். உள்ளே எந்த அசைவும் கிடையாது. உள்ளே இருக்கும் வெற்றிடம் (சூன்ய ஆகாசம்) மாறாமல் ஒரே மாதிரியே நீடிக்கும்' என்ற கருத்துபட அஷ்டாவக்ர முனிவர் கூறியிருப்பவை ஐன்ஸ்டீனின் காலத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே கூறப்பட்டவை என்கிறார் ஓஷோ.
மிகவும் சிக்கலான ஆன்மிக, தத்துவ விஷயங்களை இன்றைய வாழ்வின் நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் காட்டி ஓஷோ மிக எளிமையாக விளக்கிச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.