தமிழர் மரபும் அறிவியல் பார்வையும் - ச.இராமமூர்த்தி; பக்.160; ரூ.150; லாவண்யா பதிப்பகம், 29/15, தானப்ப தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.
பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில் அணுவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; ஆநிரைகளை மேய்க்கும் தொழில் செய்தவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆயர் என்று குறிப்பிடப்படுகின்றனர். யாதவர் என்று நாடு முழுக்கக் குறிப்பிடப்படுபவர்கள், யது வமிசத்தைச் சேர்ந்தவர்கள்; சீவகசிந்தாமணியில் திருக்குறள் சிந்தனைகள் காணப்படுகின்றன - இவ்வாறு பல அரிய ஆய்வுக் கருத்துகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். சமகால கவிஞர்களிருவரின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது, நூலின் திசையை சிறிது மாற்றிவிட்டிருக்கிறது.