தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி - தஞ்சை வெ.கோபாலன்; பக்.96; ரூ.75; கலைமகள் டிரேடர்ஸ், 5, பொன்னம்பல வாத்தியார் தெரு, மைலாப்பூர், சென்னை-4.
ஒவ்வோராண்டும் திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்டியாஞ்சலி குழுவில் இடம் பெற்றிருப்பவர் நூலாசிரியர். பல நாட்டியக்கலைஞர்களுடன் பழகும் அனுபவமும், நாட்டியம் பற்றிய பரந்த அறிவும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய வரலாற்று நூல்களின் தாக்கமும் சேர்ந்து இந்நூலை எழுத அவரைத் தூண்டியிருக்கிறது.
பல்வேறு ஆலயங்களில் "நடனமாடும் பெண்களின் சிலைகளைக் காண முடியும். நடனம் தவிர பல்வேறு வகையான வாத்தியங்களும் அந்தச் சிலைகளில் காணப்படுகின்றன. நடன மாதர்கள் நடனமாடி ஆலயங்களில் வழிபாடு செய்திருக்கிறார்கள்' என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்கிற நூலாசிரியர், பல ஆலயங்களில் காணப்படும் சிலைகளைப் பற்றியும் அதில் உள்ள நாட்டியம் தொடர்பான செய்திகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
சோழர்கள் காலத்தில், விஜயநகர சாம்ராஜ்யத்தில், நாயக்கர் காலத்தில் எவ்வாறு நாட்டியம், இசை வளர்க்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பட்ட சதிர், பரத நாட்டியம் தொடர்பான அரிய விவரங்கள், பரதநாட்டியத்தை வளர்க்கப் பாடுபட்ட கலைஞர்களைப் பற்றிய தகவல்கள், தேவதாசி முறை பற்றிய விரிவான செய்திகள், தமிழகத்தில் பல ஆலயங்களில் நிகழ்த்தப்படும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளால் நாட்டியக் கலையின் மீது மக்களுக்கு ஏற்படும் ஆர்வம் என நாட்டியம் தொடர்பான பல அரிய விஷயங்கள் அடங்கிய சிறந்த நூல்.