கற்றது விசில் அளவு - ஆர்.பாண்டியராஜன்; பக்.128; ரூ.100; கற்பகம் புத்தகாலயம், சென்னை- 17. )044-24314347.
ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டியுள்ளார் ஆர். பாண்டியராஜன். ஒரு கலைஞன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய தமிழ் நடை எல்லாப் பக்கங்களிலும் உள்ளன.
சைதாப்பேட்டையில் எளிய குடும்பத்தில் பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, சிறு வயது முதல் இளமைப் பருவம் வரை வறுமையை, அதனால் வரும் துன்பத்தை இன்பத்தோடு அனுபவித்ததை இவர் சொல்லும் பாங்கு அலாதியானது. பல்வேறு தொழில்கள் செய்துகொண்டிருந்த போதிலும் இசைத் துறையில், நாடகத் துறையில், நடிப்புத் துறையில் இவர் மனம் ஈடுபட்டிருந்ததையும், அதற்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
தன் குருவான கே. பாக்யராஜை சந்தித்த பின் கதை எழுதுதல், இயக்குதல், நடித்தல், நடிப்பு சொல்லிக் கொடுத்தல் எனும் திரைத்தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்ட விதத்தை இவர் வரிவரியாகச் சொல்லும்போது, அது நம் கண்முன்னே திரைக்கதையாக விரிகிறது.
கல்கி பத்திரிகையில் 23 வாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளது. வார்த்தைகளின் அலங்காரம் என்று இல்லாமல் உணர்வுகளின் தொகுப்பாகவே இதை பார்க்க முடிகிறது. இதில் எதார்த்தம் மட்டுமே நிலவுகிறது.
பசி, உழைப்பு, அவமானங்கள், வெற்றிகள், பாராட்டுகள், பரிசுகள், பயணங்கள் என்று இவர் கடந்துவந்த வாழ்க்கைதான் இந்நூல். உதவி இயக்குநர்களில் ஒருவராக நுழைந்து இணை இயக்குநராக , சிறு காட்சிகளில் தோன்றும் நடிகனாக என்று இவரின் வளர்ச்சி இன்றைய தலைமுறை கலைஞர்களுக்குப் புத்துணர்ச்சி டானிக்.