புத்திர பாக்கியம் அருளும் பசுபதிநாதர் கோவில், கருவூர் ஆநிலை

பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஒன்றாக இருப்பது கருவூர் ஆநிலை....
புத்திர பாக்கியம் அருளும் பசுபதிநாதர் கோவில், கருவூர் ஆநிலை

பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஒன்றாக இருப்பது கருவூர் ஆநிலை என்ற சிவஸ்தலம். இந்நாளில் இத்தலம் கரூர் என்ற பெயரால் அறியப்படுகிறது. 

சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் பதிகள் ஐந்தனுள் ஒன்றாகும். புகழ்ச்சோழர் ஆட்சி செலுத்திய இடம். எறிபத்தநாயனார், சிவகாமியாண்டார் என்ற சிவனடியார்கள் இருந்த பதி. திருவிசைப் பாக்களைப் பாடிய கருவூர்த்தேவரும் இவ்வூரை பிறப்பிடமாக கொண்டவர். 

படைப்புத் தொழிலை சிவபெருமானின் ஆணையின்படி செய்கிறோம் என்பதை மறந்து, தானே பெரியவன் என்று கர்வம் கொண்ட பிரம்மனது ஆணவத்தை அடக்க, படைப்புத் தொழிலை அவனிடம் இருந்து பறித்து, காமதேனு என்ற தேவலோகப் பசுவிடம் கொடுத்தார் இறைவன். காமதேனு, இறைவனை பூஜித்து சிருஷ்டித் தொழிலை செய்துவந்ததால், ஊருக்கு கருவூர் என்றும், இறைவனுக்கு பசுபதிநாதர் என்றும், கோவிலுக்கு ஆநிலை என்றும் பெயர் ஏற்பட்டது. 

உலக சிருஷ்டிக்கு மூல காரணமாக இருப்பவர் சிவபெருமான். காமதேனுவுக்குப் படைப்புத் தொழிலை அருளிய இத்தல இறைவனை வழிபட்டு, திருஞானசம்பந்தர் அருளிய இத்தல பதிகத்தையும் பாராயணம் செய்து வந்தால் புத்திர பாக்கியம் பெறலாம் என்பது ஐதீகம். அனுபவத்தில் பலர் பலன் அடைந்துள்ளனர் என்பதை கோவில் அர்ச்சகர் மூலம் அறியலாம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: பசுபதிநாதர், ஆநிலையப்பர்

இறைவி பெயர்: சுந்தரவல்லி, அலங்காரவல்லி

எப்படிப் போவது

கரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம், திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர்,
கரூர் மாவட்டம் - 639 001.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு
 

கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும், பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம், சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 

கொங்கு நாட்டுத் திருத்தலங்களுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்), ராஜகோபுரத்துக்கு எதிரே காணப்படுகிறது. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.

இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தநாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.

கோயில் நல்ல சுற்று மதிலோடு காணப்படுகிறது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. கோவிலுக்குள் 2 பிராகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள், சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும். கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக சிவலிங்கம் காட்சி தருகிறது. 

கோயிலில் லிங்கத்துக்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உள்பிராகாரத்தில், தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எறிபத்தநாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர்.

ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால், அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோயில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும்போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். 

கந்தபுராண காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து, இக்கோயிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால், அவருக்கு தெற்குப் பிராகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர், இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில், முருகப் பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின்பக்கம் உள்ளது.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்ட ஆர்உயிர் ஆய தன்மையர்
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே. 

2. நீதியார் நினைந்து ஆய நான்மறை
ஓதியாரொடுமு கூடலார் குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியாரர் அடியார் தம் அன்பரே. 

3. விண்ணுலாமு மதி சூடி வேதமே
பண் உளார் பரமாய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

4. முடியர் மும்மத யானை ஈர்உரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள் யாவையும் ஆய ஈசரே. 

5. பங்கயம் மலர்ப்பாதர் பாதி ஓர்
மங்கையர் மணி நீலகண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை
அங்கை ஆடு அரவத்து எம் அண்ணலே.

6. தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர் மும்மதில் எய்த வில்லியர்
காவலர் கருவூருள் ஆன்நிலை
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே.

7. பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்
பெண்ணினார் பிறை தாங்கு நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை
நண்ணினார் நமை ஆளும் நாதரே. 

8. கடுத்த வாள் அரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் நல்லனே.

9. உழுது மா நிலத்து ஏனமெ ஆகி மால்
தொழுது மாமலரோனும் காண்கிலார்
கழுதினான் கருவூருள் ஆன்நிலை
முழுதுன் ஆகிய மூர்த்தி பாதமே. 

10. புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.

11. கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே. 

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சொ.சிவகுமார், திருமறைக்காடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com