தினம் ஒரு தேவாரம்

101. நின்று மலர் தூவி  - பாடல்11

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 11:

    நின்று முதுகுன்றை
    நன்று சம்பந்தன்
    ஒன்றும் உரை வல்லார்
    என்றும் உயர்வோரே

விளக்கம்:

நின்று என பதிகத்தின் முதல் பாடலைத் தொடங்கிய சமந்தர் கடைப் பாடலையும் நின்று என்றார் சொல்லுடன் தொடங்குகின்றார். இறைவன் உறையும் தலத்தினைச் சென்று அடைந்து முதுகுன்றை வலம் வந்த சம்பந்தர், பெருமானது நினைவுகளில் ஒன்றி பாடிய பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம், சம்பந்தன் ஒன்றும் உரை என்று குறிப்பிடுகின்றார். தான் வேறு பெருமான் வேறு அல்ல என்ற நிலையினை சம்பந்தர் அடைந்ததால் தான், அவரது பாடல்களும் ஓதுவார்க்கு பலவகையான பலன்கள் பெற்றுத் தரும் வண்ணம் அமைந்துள்ளன. நன்று=நல்ல பெருமையை உடைய. என்றும் என்பதற்கு இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்ள வேண்டும்    
 
பொழிப்புரை:

திருமுதுகுன்றம் சென்று ஆங்கே உள்ள இறைவனை வணங்கி, நல்ல பெருமைகளை உடைய ஞானசம்பந்தன், பெருமானுடன் ஒன்றிய உணர்வுடன்,  உரைத்த இந்த பதிகத்து பாடல்களை ஓதும் திறமை பெற்றவர், என்றும் (இம்மையிலும் மற்றும் மறுமையிலும்) உயர்வினை அடைவார்கள்.  

முடிவுரை:

இந்த பதிகத்து பாடல்களில் முதுகுன்றை வழிபட்டு பலன் அடைய வேண்டும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பழமையான தலமும், குன்றும், இறைவனைப் போன்று வணங்கத் தக்கன என்பது இங்கே கூறப்படுகின்றது. எனவே குன்றினை வலம் வருவது சிறப்பாக கருதப் படுகின்றது. சம்பந்தர் குன்றினை வலம் வந்த பின்னரே திருக்கோயிலின் உட்புறம் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதை நாம் இங்கே நினைவு கூர்வோம்.

பதிகத்தின் முதல் பாடலில் திருமுதுகுன்றத்திற்கு நம்மை அழைத்துச் சென்று குன்றையும் இறைவனையும் வணங்கச் சொல்லும் சம்பந்தர், அடுத்த பாடலில் பக்தியுடன் இறைவனை தினமும் வணங்க வேண்டும் என்றும் மூன்றாவது பாடலில் வஞ்சனைகள் ஏதும் இன்றி வணங்க வேண்டும் என்றும் நான்காவது பாடலில் அவன் மீது அன்பினை வளர்த்துக் கொண்டு காதலுடன் உளம் கசிந்து வணங்க வேண்டும் என்றும் படிப்படியாக நமது நிலையினை இறை வழிபாட்டினால் எவ்வாறு உயர்த்திக் கொள்வது என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும் அழகினை ரசிக்கலாம். ஐந்தாவது பாடலில் வினைகளை நீக்கிக் கொண்ட உயிர்கள் தற்போதம் நீங்கிய நிலையில் சிவபோதம் வளர்த்துக் கொண்டு வாழும் வழிக்கும் இறை வழிபாடு அழைத்துச் செல்லும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் எளியோர்க்கு இரங்கி உதவும் வண்ணம் செல்வம் அவர்களுக்கு பெருகும் என்றும் ஏழாவது பாடலில் பலருக்கும் தலைவராக இருந்து ஆட்சி செய்யும் ஆற்றல் கூடுமென்றும் கூறுகின்றார். ஆறு மற்றும் ஏழாவது பாடல்களில் செல்வம் பெருகும் என்றும் வீரம் விளையும் என்று இறைவனைத் தொழும் அடியார்களுக்கு கிடைக்கும் பலன்களை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கும் இறைவனை சென்று தொழுமாறு எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இம்மையில் இன்பம் அளிக்கும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர் கடைப் பாடலில் இந்த பதிகத்தினை உரைக்கும் அடியார்கள் பலவிதத்திலும் உயர்வு பெறுவர்கள் என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தினை ஓதி முதுகுன்றத்து முதியோனைத் தியானம் செய்து நாம் வாழ்க்கையில் பல விதத்திலும் உயர்ந்து மறுமையில் நமது உயிரினை உயர்த்திக் கொள்வதற்கும் முயற்சி செய்வோமாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT