பாடல் 9:
திருமரு மார்பில் அவனும் திகழ் தரு மாமலரோனும்
இருவருமாய் அறிவொண்ணா எரி உருவாகிய ஈசன்
கரு வரை காலில் அடர்த்த கண்ணுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே
விளக்கம்:
வழக்கமாக தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இராவணனின் கயிலை நிகழ்ச்சியை குறிப்படும் சம்பந்தர் இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால் இந்த பாடலில் அண்ணாமலை நிகழ்ச்சியையும் இராவணனின் கயிலை நிகழ்ச்சியையும் சேர்த்து குறிப்பிடுகின்றார். திரு=திருமகள்; திருமரு=திருமகள் உறையும்' நுதல்=நெற்றி.; கருவரை= கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணன். ஈசன்=தலைவன்;
பொழிப்புரை:
திருமகளைத் தனது மார்பில் கொண்டுள்ள திருமாலும், சிறந்த தாமரை மலரில் திகழும் பிரமனும் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம், நெடிய தீப்பிழம்பாக தோன்றிய தலைவனும், கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனும் தனது நெற்றியில் கண் உடையவனும் கடம்பூர் தலத்தில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமானை புகழும் பாடல்களை நல்ல பயிற்சி பெற்று பாடும் அடியார்கள் வானுலகம் சென்று அடைவார்கள்.