பாடல் 4:
அங்கம் மாது சேர்
பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும்
எங்கள் ஈசனே
விளக்கம்:
பங்கம்=பாதி; மன்னும்=நிலையாக இருக்கும் பெருமானின் அருள் வடிவமாக இருப்பவள் சக்தி; எனவே பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் நிலை அவன் அடியார்களுக்கு அருள் வழங்க தயார் நிலையில் இருப்பதாக கருதப் படுகின்றது. சென்ற பாடலில் பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய சம்பந்தர் இந்த பாடலில், அந்த தலைவன் உறையும் இடம் சீர்காழி என்று உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், அடியார்களுக்கு அருள் வழங்கும் குறிப்பினை மாதொருபாகன் கோலத்தில் மூலம் உணர்த்துகின்றான். அத்தகைய பெருமான் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் நிலையாக, எங்களது தலைவனாக உறைகின்றான்.