123. ஓர் உருவாயினை - பாடல் 14--19

புலன்களை அடைதல்
123. ஓர் உருவாயினை - பாடல் 14--19


    ஒரு தனு இரு கால் வளைய வாங்கி
    முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
    கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
    ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
    முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர்
    ஏத்த நின்றனை            

விளக்கம்:

இந்த வரிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள எண்கள் முதலில் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் சொல்லப் படுகின்றன. தனு=தனுசு என்ற வடமொழிச் சொல்லின் கடைக்குறை. வில் என்று பொருள். ஒரு தனு=மேரு மலையினை வளைத்து செய்யப்பட்ட ஒப்பற்ற வில்; இரு கால்=வில்லின் இரண்டு முனைகள்; நானிலம்=முறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகை நிலங்களை கொண்டுள்ள பூமி; தலம்=முப்புரம் அவுணர்=அரக்கர்கள்; வானோர்=சிறப்பினை உடைய தவயோகிகள்; மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்பவை நான்கு அந்தக்கரணங்கள்; கடுமையான முயற்சியால் அடைந்த பயிற்சி கொண்டு ஐந்து புலன்களை அடைதல் எளிது என்று கூறும் வண்ணம், மனதின் செயல்பாட்டினை அடக்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளதை நாம் அறிவோம். முக்குணம்=இராஜசம் சாத்துவீகம் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; வளி=காற்று; 
    
பொழிப்புரை:

பெருமானே, அதன் இரண்டு முனைகளும் வில்லின் இரண்டு கால்களாக இருக்கும் வண்ணம் ஒப்பற்ற முறையில் மேரு மலையினை வளைத்து, வலிமை வாய்ந்த அம்பினை அதனில் பொருத்தி, முப்புரத்து அரக்கர்களும் உலகமும் அச்சம் கொள்ளும் வண்ணம், முப்புரத்து அரக்கர்களை முற்றிலும் நீ அழித்தாய். தங்களது ஐந்து புலன்களை ஒருமுகப் படுத்தி அடக்கி, மனம் தனது செயல்பாட்டினை நிறுத்தும் வண்ணம் மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் ஒருநிலைப் படுத்தி, தாமசம் இராஜசம் சாத்துவீகம் ஆகிய மூன்று குணங்களும் இல்லாதவர்களாய், உள்ளே செல்வதும் வெளியே வருவதும் ஆகிய பிராணவாயுவினை மூலாதாரத்தில் அடக்கி ஒன்றிய மனத்துடன் தவம் புரியும் உயர்ந்த தவயோகிகள் உனது பெருமையை அறிந்து கொண்டு உன்னை புகழ்கின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com