சண்டிகர்: தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் எடுத்தவர் என்ற சாதனையை பஞ்சாபின் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 11-ஆவது சீசனில், இரண்டாவது ஆட்டம் சண்டிரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய தில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
அந்த அணியின் லோகேஷ் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தில்லி அணியின் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரை லோகேஷ் ராகுல் எதிர்கொண்டார். 4-வது பநதில் சிக்ஸ் விளாசிய லோகேஷ் ராகுல் ஐந்தாவது மற்றும் 6-வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீசினார். லோகேஷ் ராகுல் இந்த ஓவரின் 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் அடித்தார்.
அமித் மிஸ்ரா வீசிய மூன்றாவது ஓவரில் லோகேஷ் ராகுல் ருத்ர தாண்டவம் ஆடினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல், 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதோடு மட்டுமல்லாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார்.
இதன் காரணமாக 14 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சருடன் அவர் அரைசதம் அடித்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் எடுத்தவர் என்ற சாதனையை பஞ்சாபின் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 2014-ல் யூசுப் பதான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 15 பந்திலும், 2017-ல் சுனில் நரைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 15 பந்திலும் அரைசதம் அடித்ததே சாதனையைாக இருந்தது.