11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. மே 27-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் 3-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்நிலையில், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 11-ஆவது சீசன் தான் அதிகம் பிரபலமடைந்துள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'ஐபிஎல் 2018' தொடர்பான பதிவுகள், கமெண்ட்டுகள் மற்றும் ரியாக்ஷன்கள் ஆகியன மொத்தம் 425 மில்லியன் முறை கொண்டாடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் பேசப்பட்ட அணிகளில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகம் பேசப்பட்ட வீரராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பதியப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'தல ரிட்டன்ஸ்' மற்றும் 'விசில் போடு' ஆந்தம் அதிகம் விரும்பப்பட்ட பதிவாகியுள்ளது.
வங்காளப் புத்தாண்டுக்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் முஸ்தாபிஸூர் ரஹ்மான், வங்காள மொழியில் கூறிய 'ஷுபோ நபோ பர்ஷோ' என்ற வாழ்த்து அதிகம் விரும்பிய பதிவில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.