ஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
ஹாங்காங் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனை சூங் ஜி ஹ்யூனை இன்று (வியாழக்கிழமை) எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், சூங் ஜி ஹியூன் 26-24 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து, நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த செட்டிலும் இறுதிவரை போராடிய சிந்து கடைசி நேரத்தில் 20-22 என்ற கணக்கில் 2-ஆவது செட்டையும் இழந்து தோல்வியடைந்தார்.
இதன்மூலம் 26-24, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரிய வீராங்கனை சூங் ஜி ஹ்யூன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.