இந்தியா ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
மவுண்ட் மெளன்கானியில் நடைபெற்று வரும் 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய டெஸ்ட் வீரர்களான பிருத்வி ஷா, முரளி விஜய், விஹாரி, ரஹானே, பார்தீவ் படேல் போன்ற வீரர்கள் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
முதல் நாளன்று இந்திய அணி சிறப்பாக விளையாடியது. மிகவும் எதிர்பார்த்த விஜய் 28 ரன்களும் ரஹானே 12 ரன்களும் மட்டும் எடுத்தார்கள். தொடக்க வீரர் பிருத்வி ஷா 88 பந்துகளில் 62 ரன்களும் விஹாரி 150 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தார்கள். மயங்க் அகர்வால் 65 ரன்கள் எடுத்தார். சற்று விரைவாக ரன்கள் எடுத்த பார்தீவ் படேல், 111 பந்துகளில் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் நாளன்று இந்தியா ஏ அணி 89.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த விளையாடிய இந்திய அணி, 122.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பார்தீவ் படேல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், 62 ரன்களும் கெளதம் 47 ரன்களும் எடுத்தார்கள். நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து ஏ அணி, 2-ம் நாளின் முடிவில், 55 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ரூதர்ஃபோர்டு சதமடித்தார். அவர் 106 ரன்களும் பிலிப்ஸ் 13 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள்.