உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.
கனடாவின் மார்கம் நகரில் இப்போட்டியின் தனிநபர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆசிய சாம்பியனும், இந்திய வீரருமான லக்ஷயா, தாய்லாந்தைச் சேர்ந்த முதல்நிலை வீரர் குன்லவுத் விதித்சரனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எதிர்கொண்டார்.
இதில் முதல் கேமை 22-20 என போராடி வென்ற சென், அடுத்த இரண்டு கேம்களையும் 16-21, 13-21 என குன்லவுத்திடம் பறிகொடுத்தார்.
அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் லக்ஷயா சென்னுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
உலக ஜூனியர் பாட்மிண்டனில் கடந்த 2008-இல் சாய்னா மட்டுமே தங்கம் வென்றிருந்தார். தற்போது ஆடவர் பிரிவில் லக்ஷயா சென் வெண்கலம் வென்றுள்ளார்.