சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில், வங்கதேச அணியைக் கடும் போராட்டத்துக்குப் பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வென்றது.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியாலும் லிட்டன் தாஸின் விக்கெட் குறித்த நடுவரின் முடிவாலும் கோபமடைந்த வங்கதேச ரசிகர்கள் கோலியின் இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி & இண்டெலிஜென்ஸ் (சிஎஸ்ஐ) என்கிற அமைப்பு இந்திய கேப்டன் கோலியின் இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான நடுவரின் முடிவு குறித்த புகைப்படங்கள் கோலியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எல்லா நாடுகளும் சம அளவில் நடத்தப்படவேண்டும். இது எப்படி அவுட் எனச் சொல்லுங்கள் என அதில் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
எனினும் தற்போது கோலியின் இணையத்தளம் ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்டு பழைய நிலைமைக்கு வந்துள்ளது.