இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியா, மே.இ.தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 129 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 157 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
அதுமட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் உள்ளிட்ட புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதையடுத்து விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ், விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிறந்த வீரர் மற்றும் தலைசிறந்த மனிதர், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் பற்றின் மூலம் சிறப்பான ஆட்டங்களால் கவர்ந்து வருகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.