இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.
கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இறுதி மற்றும் 5-ஆவது ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 332, இந்தியா 292 ரன்களை எடுத்தன. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 423/8 குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் குக் 147, ஜோ ரூட் 125 ரன்களை குவித்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ஹனுமா விஹாரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 464 ரன்களை இங்கிலாந்து நிர்ணயித்தது. 94.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 345 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது இந்தியா. கே.எல். ராகுல் 1 சிக்ஸர், 20 பவுண்டரியுடன் 224 பந்துகளில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 146 பந்துகளில் 114 ரன்களை எடுத்த நிலையில் ரஷீத் பந்தில் வெளியேறினார். ஒருகட்டத்தில் ராகுல்-ரிஷப் பந்த் இணை அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெறக்கூடிய நிலைமையும் தேநீர் இடைவேளையின்போது உருவானது. எனினும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியின் கனவைத் தகர்த்தார்கள். ஆட்ட நாயகன் விருது, இத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் அலாஸ்டர் குக்குக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஆல்ரவுண்டர் சாம் கரணும் இந்திய அணியின் தொடர் நாயகனாக கேப்டன் விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.