வரும் 2030 ஒலிம்பிக் போட்டிகளை இணைந்து நடத்த விண்ணப்பிக்க தென்கொரியா-வடகொரிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
கடந்த 1950 கொரிய போர் மூண்டது முதல் தென்கொரியா-வடகொரியா உள்ளிட்ட இரு நாடுகளும் பரம வைரிகளாக உள்ளன. பகைமை நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து ராணுவ பதற்றம் நிறைந்த பகுதியாக அவற்றின் எல்லை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2017 ஆண்டு முதல் இரு நாடுகளின் தலைவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன்மூலம் பதற்றம் தணிந்துள்ளது. இந்நிலையில் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் முதன்முறையாக இரு நாடுகளின் சார்பில் சில விளையாட்டுகளில் ஒன்றிணைந்த அணிகள் பங்கேற்று பதக்கம் வென்றன.
அதன் தொடர்ச்சியாக பியாங்யாங்கில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் 2030 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இரு நாடுகளும் இணைந்து விண்ணப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பியாங்சேங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய அணிகள் பங்கேற்ற நிலையில் இரு நாடுகள் இடையே விளையாட்டில் தீவிர ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கடந்த 1986-இல் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா புறக்கணித்திருந்தது.