ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்களை எடுத்து வென்றது.
நேற்றைய ஆட்டத்தின் 18-வது ஓவர் முடிவில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடைசிப் பந்தை வீசியபோது கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அக்காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து பாண்டியா விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாண்டியாவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான தீபக் சஹார் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்றும் அறியப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.